குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரௌபதி முர்மு, நாட்டின் முதல் பழங்குடியின பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெறவுள்ளார். அவர் கடந்து வந்த பாதையை விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.
ஒடிசா மாநிலத்தில் மின்சாரம், சாலை வசதி என எந்தவிதமான அடிப்படை வசதிகளே இல்லாத குக்கிராமத்தில், 1958-ஆம் ஆண்டு பிறந்தவர் திரெளபதி முர்மு.புவனேஸ்வர் நகரிலுள்ள ராம தேவி மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்ற திரெளபதி, அங்குள்ள ஒரு கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றி உள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கடந்த 1997-ஆம் ஆண்டு, ராய்ராங்ன்பூர் தொகுதியின் கவுன்சிலராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார்.சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சிறந்த சட்டமன்ற உறுப்பினருக்கான ‘நில்கந்தா’ விருதையும் பெற்றிருக்கிறார்.
ஒடிசா மாநிலத்திலுள்ள மயூர்பஞ்சு மாவட்ட பாஜக தலைவராக, ஏழு வருடங்கள் பதவி வகித்திருக்கிறார். கடந்த 2000 முதல் 2004 வரை, நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவையில், வணிகம் மற்றும் போக்குவரத்து, மீனவ மற்றும் கால்நடை வளர்ப்பு ஆகிய துறைகளில் அமைச்சராக திரௌபதி பதவி வகித்துள்ளார். 2015 முதல் 2021 ஜார்க்கண்ட மாநிலத்தின் 8வது ஆளுநராகப் பதவி வகித்தார்.
2000-ஆம் ஆண்டு மாநிலம் உருவானதிலிருந்து ஐந்தாண்டுக் காலத்தை நிறைவு செய்த முதல் ஆளுநர் திரௌபதி முர்முவே ஆவார். பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த முதல் பெண் தலைவராக அறியப்படும் இவர், மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட நாட்டின் முதல் பழங்குடியின பெண் என்ற பெருமையைப் பெற்றவர்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிட்ட திரௌபதி முர்மு, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.