காவிரி ஆற்றில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசிற்கு சிபிஐ (எம்) மாநிலக்குழு கண்டனம் தெரிவித்துள்ளது.
சிபிஐ (எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், காவிரி ஆற்றில் தமிழ்நாடு எல்லையை ஒட்டியுள்ள மேகதாட்டில் புதிய அணையக் கட்ட கர்நாடக அரசு தொடர்ந்து முயன்று வருகிறது எனவும், கர்நாடகத்திலும், ஒன்றியத்திலும் பாரதிய ஜனதா கட்சியே ஆட்சிப் பொறுப்பில் உள்ள சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு சட்டத்திற்குப் புறம்பாக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ரூ. 9000 கோடியில் திட்டமதிப்பீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக ரூ. 1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரை நிலைமை சென்று விட்டதைச் சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்துள்ள அவர், மேகதாட்டு தொடர்பான விவாதத்தைக் காவிரி மேலாண்மை ஆணையம் மேற்கொள்ளும் என்று அதன் தலைவர் அறிவிப்பு வெளியிட்டதை அத்துமீறிய நடவடிக்கை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டித்ததை நினைவுபடுத்துவதாகக் கூறியுள்ளார்.
மேலும், தமிழ்நாடு அரசும் ஆணையத்தின் நடவடிக்கையைக் கண்டித்ததோடு, உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தது எனக் குறிப்பிட்டுள்ள அவர், வழக்கு விசாரணையின் போது, மேகதாட்டு அணை கட்டுவது குறித்து எந்த விவாதமோ, முடிவோ ஆணையம் மேற்கொள்ளக் கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதோடு வரும் 26-ஆம் தேதி அறிக்கை அளித்திட வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பிற்கு முரணாகத் தொடர்ந்து செயல்பட்டு வரும் கர்நாடக அரசு, காவிரியில் தமிழகத்தின் பாசன உரிமையை மறுத்து உபரி நீரை மட்டும் பயன்படுத்தும் மாநிலமாக மாற்ற முயல்கிறது எனத் தெரிவித்துள்ள அவர், கனமழை காலத்தில் வரும் உபரி நீரையும் தடுக்கும் வகையில் தான் மேகதாட்டில் புதிய அணையைக் கட்ட கர்நாடக அரசு முயல்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இதற்கு ஒன்றிய அரசு துணை போகாமல் காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் இறுதித் தீர்ப்பின் படி தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையைப் பாதுகாத்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதோடு, காவிரியின் மேகதாட்டுவில் அணை கட்டுவதை அனுமதிக்கக் கூடாது எனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கேட்டுக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.