அகில இந்திய டிஜிட்டல் வானொலி சென்னை பிரிவில், தமிழ் புறக்கணிக்கப்பட்டு இந்தி மொழி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒலிபரப்பப்படுவதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், DRM 783 Khz என்ற அலை வரிசையில், அகில இந்திய வானொலியின் சென்னை பிரிவில், முழுக்க முழுக்க இந்தி நிகழ்ச்சிகள் மட்டுமே ஒலிபரப்பப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தமிழ் மொழி நிகழ்ச்சிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், இது திட்டமிட்ட இந்தித் திணிப்பு என்றும், DRM எனப்படும் டிஜிட்டல் வானொலிதான், நவீன தொழில்நுட்பத்தின் வடிவம் என்றும் தெரிவித்துள்ளார்.
பண்பலைக்கு மாற்றாகக் கருதப்படும் இந்த அதிசய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தமிழ் நிகழ்ச்சிகளை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தி ஒலிபரப்பை நிறுத்திவிட்டு, முழுக்க முழுக்க தமிழ் நிகழ்ச்சிகளையும், தமிழ் செய்திகளையும் டிஜிட்டல் முறையில் துல்லியமாக ஒலிபரப்ப, சென்னை வானொலியும் பிரசார் பாரதியும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.







