மதுரை சோழவந்தானில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் தொகுதி திமுக சார்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சோழவந்தானிலிருந்து தேனுர் வரை சுமார் 8 கிலோமீட்டர் தூரம் நடத்தப்பட்ட இப்போட்டியை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பெரிய மாடு பிரிவில் 9 ஜோடிகள் கலந்து கொண்ட இப்போட்டியின் முடிவில், பெரிய மாடு பிரிவில் அவனியாபுரம் எஸ் கே ஆர் கண்ணன் சார்பாக திருமலை எம் ஆர் கே கண்ணன் முதலிடத்தையும், இரண்டாவது பரிசை புதுப்பட்டி சின்னச்சாமி நினைவாக சிவபாலன் மூன்றாவது பரிசும், வேலங்குளம் கண்ணன் நான்காவது பரிசாக, புதுப்பட்டி கே எ அம்பாள் காளைகளும் பெற்றன.
சிறிய மாடு பிரிவில் 20 ஜோடிமாடுகள் கலந்து கொண்டு, முதலில் வந்த நான்கு ஜோடிகளுக்கு பரிசுகள் அளிக்கப்பட்டது. வெற்றி பெற்ற மாடுகளுக்கு அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை பரிசுகளும் கேடயமும் வழங்கப்பட்டது. இந்த பந்தயத்தை சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வழிநெடுகில் நின்று கண்டு ரசித்தனர்.
இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயம் சோழவந்தான் மதுரை மெயின் ரோட்டில் நடைபெற்றதால் காலை 6 மணி முதல் 9 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு, மாற்றுப்பாதையில் பேருந்துகள் இயக்கப்பட்டன.
—சௌம்யா.மோ






