பொது இடங்களில் சிலர் நடந்து கொண்டவிதங்கள் கட்சியை பழிக்கு ஆளாக்கியுள்ளதாகவும், தன்னை துன்புறுத்துவது போன்று நடந்து கொள்ளாதீர்கள் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு கூட்டத்தில் 2-வது முறை தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பொறுப்பேற்று கொண்டார். பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், இது அண்ணா அமர்ந்த இடம், கருணாநிதி கோலோச்சிய இடம் என்றும் தான், அண்ணாவோ, கருணாநிதியே இல்லை என்றார். உழைப்பு..உழைப்பு என்பதால் தான் பொறுப்பு தனக்கு தந்திருப்பதாகவும் கூறினார். திமுக தொடங்கிய போது இருந்த சுறு சுறுப்பு இப்போதும் செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொண்டர்களை நம்பிதான் 2-வது முறையாக தலைவர் பொறுப்பை ஏற்று இருப்பதாகவும், நாடாளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி என அனைத்திலும் வெற்றி முகம் கண்டோம் என கூறினார். வெற்றியோடு பயணித்து இன்று சிறப்பாக இந்த கூட்டம் நடைபெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. கட்சியில் சில பதவிகளுக்கு போட்டியிருந்தது உண்மைதான். ஆனால் அது பதவிக்கான போட்டி இல்லை, உழைப்பதற்கான போட்டி என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். மாவட்ட அளவில் மூத்த நிர்வாகிகள் தட்டிக்கொடுத்தும், விட்டுக்கொடுத்ததால் புதிதாக சிலர் பொறுப்புக்கு வந்துள்ளீர்கள். அவர்கள் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார்.
திமுக உட்கட்சி தேர்தலில் வன்முறை வெடிக்கும் என எதிர்ப்பார்த்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் நமக்கு தற்போது பொறுப்பும் கடமையும் மிக மிக உயர்ந்துள்ளது என்பதை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். அப்போதுதான் பொறுப்புகள் தொடரும் என மு.க.ஸ்டாலின் எச்சரித்தார். புதியவர்கள் இணைப்பால் மூத்தவர்களுக்கு வாய்ப்பு மறுக்கபடவும் இல்லை, அவர்கள் மறக்கப்படவும் இல்லை என விளக்கமளித்தார். சொந்த விருப்பு வெறுப்பு கட்சியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.
புதிய நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க போவதாக தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சிலர் பொது இடங்களில் நடந்து கொண்ட விதங்களால் கட்சி பழிக்கும், ஏராளனத்திற்கும் உள்ளாகிவிட்டது என்றார். ஒவ்வொரு நாளும் எதாவது பிரச்சனையை ஏற்படுத்தினால், தான் என்ன செய்ய முடியும் என்றும் வேதனை தெரிவித்தார். எனவே, நாம் பயன்படுத்தும் சொற்களை மிக கவனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார். திமுக சாதனையில் குறைகளை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பவர்கள் இதனை பிரச்னையாக கிளப்பி விடுவார்கள் என கூறினார்.
திராவிட மாடல் இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் நிதிநிலை சீராக இருந்திருந்தால் இன்னும் பல திட்டங்களை செயல்படுத்தியிருக்கலாம் என்றும் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் செய்து வரும் பாசறை கூட்டம் தனக்கு மனநிறைவு ஏற்படுவதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளையும் கைப்பற்றி அகில இந்திய அரசியலில் முக்கிய சக்தியாக மாறவேண்டும். மேலும் நாடாளுமன்ற வெற்றிக்காக பாஜக எப்படி பட்ட அரசியலிலும் ஈடுபடும் என குற்றம்சாட்டினார்.
மதம், ஆன்மிகத்தை தூண்டிவிட்டு அரசியல் செய்து வருவதாகவும், அதிமுக உட்கட்சி பிரச்னையை அவர்கள் பயன்படுத்தி கொள்வதாகவும் கூறினார். அதிமுகவில் சரியான தலைமை இல்லை என்பதால் அவர்கள் 4 பிரிவுகளாக பிரிந்து கிடப்பதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார். நமது சாதனையே அவர்களின் புகாருக்கு பதில் கூற வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், இந்த பேரியக்கத்தின் தலைவராக பொறுப்பேற்றிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்திருப்பதாக தனது உரையை முடித்து கொண்டார்.
-இரா.நம்பிராஜன்