ஓய்வு பெற்ற டிஜிபி உடல்நலக்குறைவால் காலமானார்

தமிழகத்தின் முன்னாள் டிஜிபி முகர்ஜி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். முன்னாள் டிஜிபி முகர்ஜி, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை தமிழக சட்ட ஒழுங்கு…

தமிழகத்தின் முன்னாள் டிஜிபி முகர்ஜி உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார்.

முன்னாள் டிஜிபி முகர்ஜி, கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை தமிழக சட்ட ஒழுங்கு டிஜிபியாக பதவி வகித்துள்ளார். மிகவும் திறமையாக பணியாற்றி, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்துள்ளார். இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னை ராமாபுரம் அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள ஐ.பி.எஸ் காலணியில் வசித்து வந்தார்.

அண்மைக் காலமாகவே வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட முன்னாள் டிஜிபி முகர்ஜி, சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் 75 வயதான அவர் நேற்று இரவு, தனது வீட்டில் காலமானார். இவரது மறைவு, தமிழக காவல்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதனிடையே, முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், முகர்ஜி மறைவு செய்தி கேட்டு துயரத்திற்கு உள்ளானேன் என குறிப்பிட்டுள்ளார். முகர்ஜி கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழக அரசில் தமிழக காவல்துறைத் தலைவராகச் சிறப்புற பணியாற்றியவர்.

நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.இல் நீண்ட காலம் பணியாற்றி தமிழகத்திற்கு பெருமைச் சேர்த்தவர். காவல்துறையினருக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய முகர்ஜியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரோடு பணியாற்றிய காவல் துறையினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.