சென்னை ஆவடி அருகே வீட்டிற்குள், நுழைய முயன்ற பாம்புடன் சண்டையிட்டு தன் எஜமானை காப்பாற்றிய நாய் துடித்துடித்து உயிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த ஆவடி ராஜ் பாய் நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் மதிவாணன்-நந்தினி தம்பதி. இவர்களது வீட்டில் 2 நாய்களை வளர்த்து வந்தனர்.அதற்கு மேக், டாம் என செல்லப் பெயரிட்டு அழைத்து வந்தனர். அந்த நாய்கள் வெளி ஆட்கள் யாரையும் அவ்வளவு எளிதாக வீட்டில் நுழைய விடாமல் காவல் காப்பதில் கில்லடியாக இருந்து வந்தது.
இந்த நிலையில் சம்பவத்தன்று மதிவாணன் வேலைக்கு சென்று விட்டார். இவரது மனைவி நந்தினி வீட்டில் தனியாக வேலை செய்து கொண்டிருந்திருந்தார். அப்போது இவரது வீட்டில் நாய் வழக்கத்துக்கு மாறாக அதிக சத்தத்துடன் குரைத்துக் கொண்டு
வீட்டை சுற்றி அங்கும் இங்குமாக ஓடி உள்ளது. இதை கவனித்த நந்தினி வெளியே வந்து பார்த்த போது, நாய்கள் வீட்டின் பின்புறத்தில் சென்றுள்ளது. மேலும் நந்தினியை வீட்டின் பின்புறத்திற்கு அருகில் செல்ல நாய்கள் விடவில்லை. பதறிப் போய் அங்கு பார்த்த போது 5 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு வீட்டில் புகுந்திருப்பது தெரியவந்தது. உடனடியாக அந்த இரு நாய்களும் எஜமானை காப்பாற்ற நினைத்து பாம்புடன் சண்டையிட்டன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த நந்தினி பாம்பிடம் இருந்து 2 நாய்களை
காப்பாற்ற முயன்றும், காப்பாற்ற முடியவில்லை. இது குறித்து உடனடியாக நந்தினி
திருவள்ளூர் மாவட்ட வன பாதுகாப்புத்துறை வனச்சரக ஆய்வாளர் எடிசனுக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் ஆவடியை சேர்ந்த பல்லுயிர் பாதுகாப்பு நிறுவனர் பாம்பு பிடி வல்லுநர் ரீகன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டார். இருந்தபோதிலும் அந்த இரு நாய்களும் அரை மணி நேரம் விடாமல் போராடி சண்டையிட்டு அந்தப் பாம்பை கடித்து குதறியது. இதனால் பாம்பின் விஷம் மேக் என்கின்ற பாக்சர் வகை சேர்ந்த நாய்க்கு ஏறியதில் வாயில் நுரை தள்ளியபடி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்து போனது.
அதன் அருகிலேயே சிப்பிப்பாறை வகையை சேர்ந்த மற்றொரு நாயான டாம் கண்களில் நீர்வடிந்தபடி சோகத்தில் படுத்துக் கொண்டது. இந்த காட்சிகளை அங்கு இருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
தன் உயிரை பணயம் வைத்து தனது எஜமானை காப்பாற்றிய அந்த நாயின் நன்றியுணர்வை அறிந்து அப்பகுதியினர் ஆச்சரியம் அடைந்தனர். இதற்கிடையில் பாம்பு பிடி வல்லுநர் ரீகன் நாயுடன் சண்டையிட்டு உயிருடன் இருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து சாக்கு பையில் அடைத்து வெங்கல் வனப்பகுதியில் விட்டார்.
ரூபி.காமராஜ்