முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாஜக கனவு உலகில் வாழ வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் உங்களில் ஒருவன் புத்தக வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புத்தகத்தை வெளியிட , திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். விழாவில் பேசிய ராகுல் காந்தி “நான் என் அண்ணன் மு.க. ஸ்டாலின் அவர்களைப் பாராட்ட விரும்புகின்றேன் , ஒரு அருமையான புத்தகம் கொடுத்தற்காக, அவரது வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம் நிறைந்தது” என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், என் தாயார் என்னை அழைத்து இன்று மு.க. ஸ்டாலினின் பிறந்த நாள். என்று கூறினார். அவருக்கு எத்தனை வயதிருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அம்மாவிடம் கேட்டேன் அதற்கு என் அம்மா 50லிருந்து 60க்குள் இருக்கும் என்று தெரிவித்தார் நான் 69 வயது என்று சொன்னேன் ஆனால் அவர் அதை நம்பவில்லை. இந்த புத்தகத்தில் இருக்கிறதா என்று தெரியாது, அவர் எப்படி இளமையாக இருக்கிறார் என்று சொல்ல வேண்டும்.
தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, சில நாட்களுக்கு முன்னாள் நான் நாடாளுமன்றத்தில் பேசிய உரையைத் தமிழ்நாட்டின் மக்கள் கொண்டாடியதாக அறிந்தேன். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. என்னை அறியாமலேயே பத்திரிகையாளரிடம் நான் தமிழன் என்று கூறினான், பிறகுதான் நான் யோசித்தேன் நான் ஏன் அப்படிச் சொன்னேன் என்று. 3000வருடங்கள் பழமையான நாகரிகம் கொண்டது தமிழ் . என் இரத்தம் இந்த மண்ணில் கலந்திருக்கிறது. பிறகுதான் உணர்ந்தேன் நான் என்னைத் தமிழன் என்று அழைத்துக் கொள்ள எனக்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது என்று.
நான் நாடாளுமன்றத்தில் இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை உணர்ந்தே சொன்னேன்.பிரதமர் தமிழகம் வரும்போதெல்லாம் பொருள் புரியாமல் தமிழகத்தைப் பற்றிப் பேசுகிறார். தமிழ் நாட்டு மக்கள் ஜிஎஸ்டி என்பது நியாயமற்றது, அது எங்களுக்குப் பாதகமானது என்று சொன்னால் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. விடுதலை பெற்ற இந்தியாவில் முதன்முறையாக ஒரு மாநிலத்தின் உரிமைகள் பறிக்கப் பட்டுள்ளன. இது ஜம்மு காஷ்மீருக்கு அவர்கள் இழைத்திருக்கும் மிகப்பெரிய அநீதி.
பஞ்சாபில் இருக்கிற 100 கணக்கான மைல்களை எடுத்து எல்லை பாதுகாப்புப் படையினரிடம் கொடுத்திருக்கின்றனர். எங்களுடைய ஒட்டுமொத்தமான கருத்து வேற்றுமையில், ஒற்றுமை என்பதுதான். மேலும் நம்முடைய அமைப்பில் மக்களின் குரல்தான் எதிரொலிக்க வேண்டும். அவர்களின் குரல் அல்ல. பாஜக கற்பனை உலகில் வாழ வேண்டாம். என்று தெரிவித்த ராகுல் காந்தி முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகளை கூறி தன் உரையை முடித்துக் கொண்டார்.









