அறப்போராட்டத்தில் திமுக தொண்டர்களும் பங்கேற்க வேண்டும் – திருமாவளவன்

நாளை நடைபெற உள்ள மனித சங்கிலி அறப்போராட்டத்தில் திமுக தொண்டர்களும் பங்கேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 1994 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற பஞ்சமி…

நாளை நடைபெற உள்ள மனித சங்கிலி அறப்போராட்டத்தில் திமுக தொண்டர்களும் பங்கேற்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த 1994 ஆம் ஆண்டு செங்கல்பட்டில் நடைபெற்ற பஞ்சமி நில மீட்புப் போராட்டத்தில், போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ஜான் தாமஸ், ஏழுமலை ஆகியோருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த காரனை கிராமத்தில் அமைந்துள்ள ஜான் தாமஸ், ஏழுமலை நினைவிடத்தில் வீரவணக்க நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், வீரவணக்கம் செலுத்திய பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நாளை நடைபெற உள்ள மனித சங்கிலி அறப்போராட்டத்தில் கிட்டத்தட்ட 54 அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்க உள்ள நிலையில், ஆளுங்கட்சி என்ற முறையில் திமுக இதில் பங்கேற்கவில்லை.

ஆனாலும் இந்த செய்தியாளர் சந்திப்பின் மூலமாக, நான் திமுகவைச் சார்ந்த தொண்டர்கள் இதில் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழகத்தில் திமுகவை தவிர, திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்க இருக்கிறார்கள். திமுக கூட்டணியில் இடம் பெறாத தமிழ் தேசிய உணர்வாளர்கள், ஜனநாயக பற்றாளர்கள் என பலரும் இந்த அறப்போரில் பங்கேற்க இருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்க்கு இவ்வளவு கடுமையான எதிர்ப்பு வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும்தான் இவ்வளவு எதிர்ப்பு உருவாகியுள்ளது.

தமிழகத்தில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு ஹிந்தியை முழுமையாக திணிக்கும் போக்கு என்பது பிஜேபியின் செயல் திட்டங்களில் ஒன்று. ஆங்கிலம் முழுமையாக துடைத்தெரியப்பட வேண்டும் என்கிற செயல் திட்டத்தோடு ஆர்எஸ்எஸ், பிஜேபி உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்திலே அமைச்சர்கள், 60 விழுக்காடு ஹிந்தியை கொண்டு வந்து விட்டோம், இன்னும் 40 விழுக்காடு உள்ள ஆங்கிலத்தை இல்லாமல் ஆக்குவோம் என்று வெளிப்படையாக பேசுவதை நாம் பார்க்க முடிகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே, முதன்முதலில் பதவியேற்ற உடன் வந்த சுற்றறிக்கைகள் அனைத்தும், இந்தியில் மட்டுமே இருந்தது. ஆங்கிலம் இல்லை. நாங்கள் கோரிக்கையை எழுப்பி வலியுறுத்திய பின்னரே ஆங்கிலத்தில் அவர்கள் சுற்றறிக்கைகளை அனுப்புகிறார்கள். அவர்களின் ஒவ்வொரு கனவு திட்டத்தையும் நினைவாக்கிக் கொண்டே வருகிறார்கள்.

ஆங்கிலம் ஒரு இணைப்பு மொழியாக அனைத்து தேசிய இடங்களையும் இணைக்கும் மொழியாக இருக்க வேண்டும். அது நீடிக்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். தமிழக முதல்வர் இதை வலியுறுத்தக்கூடிய வகையில் அறிக்கை வெளியிட்டிருப்பதை பாராட்டுகிறோம்” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.