பேரறிவாளன் விடுதலையில் உரிமை கொண்டாட திமுகவுக்கு எவ்வித உரிமையும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் இன்று விடுதலை அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில் பேரறிவாளன் விடுதலை குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பேரறிவான் விடுதலையில் உரிமை கொண்டாட திமுகவுக்கு எவ்வித அருகதையும் இல்லை.
பேரறிவாளன் விடுதலை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சலான சட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி எனவும், எடப்பாடி 2018 ஆம் ஆண்டு அமைச்சரவையை அவசரமாக கூட்டி, ஆளுநருக்கு தீர்மானத்தினை அனுப்பி வைத்ததன் பலன் தான் இது எனவும் கூறினார்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இன்று வழங்கி இருப்பதற்கு காரணம் அதிமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது தான், சரியான வகையில் தீர்மானம் இன்று நிறைவேற்ற பட்டு இருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் சொன்னால், அதிமுக சிறப்பான வகையில் செயல்பட்டு இருப்பது தான் என அவர் பேசினார்.
மேலும் இந்த விடுதலைக்கு முழு சொந்தக்காரர்கள் அதிமுக தான் என பேசிய அவர், திமுக இந்த எழுவர் விடுதலையில் துரோகம் செய்து விட்டு, இன்று போய் அவர்களை கட்டி அழுவது உள்ளிட்ட செயல்களை செய்வதை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்று கொள்ளமாட்டார்கள் என கூறினார்.
எழுவர் விடுதலைக்கு திமுக அன்றே முயற்சி செய்திருக்கலாம், ஆனால் இன்று நாங்கள் எடுத்த முயற்சியில் திமுக கொண்டாடுவதால் எந்த பயனும் இல்லை. எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும். அதுதான் அதிமுகவின் நிலைபாடு.
விடுதலை ஆன பேரறிவாளனின் எதிர்காலத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும். எங்களை பொறுத்த வரை தமிழர்களின் குரலான, எழுவர் விடுதலை தான் எப்போதும் பேசுவோம். அன்று, இன்று, நாளை என எந்த கருத்தும் இல்லை, அதிமுக எப்போதும் ஒரே நிலைப்பாடு தான் என அவர் பேசினார்.








