கொரோனா பரவல் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. மறுபடியும் சீனாவின் சில நகரங்களில் கொரோனா பரவல் வேகமெடுக்கத் தொடங்கியது. இதையடுத்து, அந்தப் பகுதியில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்ததுடன் முழு ஊரடங்கு நடவடிக்கைகளையும் அந்நாட்டு அரசு முன்னெடுத்தது.
சீனாவின் அண்டை நாடான வடகொரியாவில் கடந்த மாத இறுதியில் இருந்து கொரோனா எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. உலகமே கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த 2020ஆம் ஆண்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனது எல்லைகளை மூடியது வடகொரியா. அப்படிப்பட்ட நாட்டில் தற்போது கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது.
அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. புதன்கிழமை மட்டும் 2,32,880 பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகவும் 6 பேர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன், அரசு அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை கூட்டம் நடத்தினார். அப்போது, கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியதாக அதிகாரிகளை அவர் கடிந்து கொண்டார்.
10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில், சுமார் 7 லட்சம் பேர் வீட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். இந்தச் சூழ்நிலையை சமாளிக்க தேவையான உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு சுகாதார அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.








