அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை எல்லாம், தற்போதை ஆளும் திமுக அரசு மூடுவிழா செய்ய முயற்சித்து வருவதாக வி.கே சசிகலா குற்றம்சாட்டியுள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கட்சி வெற்றி பெற வேண்டும் என்று மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான வி.கே சசிகலா தொண்டர்களை நேரில் சந்தித்து வேன் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோவில், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம்,ஆகிய இடங்களில் நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது மிகுந்த ஆரவாரத்தோடு வி கே சசிகலாவை வரவேற்ற தொண்டர்கள் , செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தை அடைந்த போது கிரேன் மூலம் 100 ஆடி உயரத்தில் இருந்து மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனையடுத்து திருக்கழுகுன்றம் பேருந்து நிலையம் அருகே பிரச்சார வேனில் இருந்த படியே தொண்டர்களிடையே உரையாற்றிய வி கே சசிகலா,
அதிமுக ஆட்சி காலத்தில் அம்மா ஜெயலலிதா இருந்த போது ,மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை கொண்டுவந்தார். குறிப்பாக பெண்களுக்கான பல்வேறு முத்தான சிறப்பு திட்டங்களையும், வசதிகளையும் செய்துள்ளார். ஆனால் தற்போதைய ஆளும் திமுக அரசு அவற்றை மூடுவிழா செய்யும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. எங்கும் போதை பொருட்கள் கலாச்சாரம் பெருகியுள்ளது என பேசினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேற்றைய தினம் சட்டமன்ற கூட்டத்தொடரில் நடந்த நிகழ்வுகள் குறித்து பேசினார். அப்போது தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆளுநர் உரை என்பது, சட்டமன்றத்தில் இருந்து அனுப்பப்பட்டு, பிறகு அதில் ஏதேனும் மற்றம் இருந்தால் ,அதனை திருத்தி அமைத்து, ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, மீண்டும் சட்டமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அப்படி அனுப்பப்பட்ட பின் சட்டமன்றத்திலும் அதை சரிபார்த்து அச்சிடுவது வழக்கம். அதை தான் ஆளுநர் சட்டமன்றத்தில் வாசிப்பார். ஆனால் இன்றைய தினம் ஆளுநரின் உரையில் என்ன இருந்தது என்பது நம்மக்கு தெரியாது என தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து இபிஎஸ், ஓபிஸ் குறித்து பேசிய வி கே சசிகலா, அவர்கள் இருவரும் தங்களுக்குள் உள்ள பிரச்சனைக்காக வழக்கு தொடர்ந்துள்ளனர். அதற்கும், எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என் சம்மந்தப்பட்ட வழக்கில் தீர்ப்புக்காக காத்திருக்கிறேன். தலைவர் கொண்டுவந்த சட்ட திட்ட விதிகள் படி இருக்க வேண்டும் என தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதன்படி தான் எல்லாமே நடக்கும் என தெரிவித்தார்.
மேலும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பில் உள்ள கரும்புகள் 6 அடி உயரம் வரை இருக்கவேண்டும் என தெரிவித்து அளவு குறைவாக உள்ள கரும்புகளை கொள்முதல் செய்யாமல் உள்ளனர் இதை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.