விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் அரசாகவும், விவசாயிகள் வேதனையை கவனத்தில் கொள்ளாத அரசாகவும் திமுக அரசு உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.
உசிலம்பட்டியில் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார். பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆர்.பி.உதயகுமார், எடப்பாடி பழனிச்சாமி 40 ஆண்டு கால கனவு திட்டத்தை நனவாக்கினார். 58ம் கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படாத காரணத்தால் விவசாயிகள் மன வேதனை அடைந்துள்ளனர். 58ம் கால்வாய் திட்டத்தில் அதிமுக அரசு மூன்று முறை திறந்துவிட்டது. அதனால், மதுரை வரும் முதலமைச்சர் மக்கள் மீது அக்கறை இருந்தால் 58ம் கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், 70.44அடி தண்ணீர் உள்ள வைகை அணையில் இருந்து 58ம் கால்வாய்க்கு தண்ணீர் திறக்க வேண்டும். விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் அரசாகவும், விவசாயிகள் வேதனையை கவனத்தில் கொள்ளாத அரசாகவும் திமுக அரசு உள்ளது. 110 வருவாய் கிராம மக்களின் குடிநீர் ஆதரமாகவும், 2500ஏக்கர் விவசாய நிலம் பலன்பெறும் வகையில் 58ம் கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும். அதனால், அந்த திட்டத்திற்கு 140 நாட்களுக்கு 316 கன அடி நீர் திறக்க வேண்டும்.
இதற்கு, முதலமைச்சர் செவி சாய்க்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம் என்றார். மேலும், மாவட்ட ஆட்சியர் கனிவோடு கோரிக்கையை பெற்று நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அதனால், போராட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்து மனுவினை தந்துள்ளோம். முல்லைபெரியாறு அணை உரிமையை பெற்றுத்தந்ததற்காக விவசாயிகள் விழா எடுத்த அம்மா திடலை கலைஞர் அரங்கமாக மாற்றிவிட்டார்கள் என்றும், சர்வாதிகார போக்குடன் முதலமைச்சர் செயல்படுகிறார் என்றும் கூறினார்.
மேலும், விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கால் வைக்க முடியும். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் விவசாயிகளுக்கு முதல்வர் உரிய விளக்கம் அளிப்பாரா? தன் மெளன விரதத்தை கலைப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். முப்பெரும் விழா, ஐம்பெரும் விழா, ஐப்பெரும் காப்பிய விழா எடுக்கும் முதல்வர் அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் சரியாக கிடைப்பதை கவனத்திலும் எடுத்துக்கொள்ளவில்லை. அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் தட்டுப்பாடு நிலவுவது முதல்வருக்கு தெரியுமா? தெரியாதா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.







