திமுக முன்னாள் எம்பி மஸ்தான் கொலை வழக்கு – கார் ஓட்டுநரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி!

திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது கார் ஓட்டுநரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த ஆண்டு…

திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது கார் ஓட்டுநரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திமுக முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ம் தேதி கூடுவாஞ்சேரி அருகே மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது நெருங்கிய உறவினரான இம்ரான்பாஷா என்பவர் மஸ்தானிடம் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். மஸ்தான் காரில் சென்று கொண்டிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்ற போது உயிரிழந்ததாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், டாக்டர் மஸ்தான் இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது மகன் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி சந்தேகத்தின் அடிப்படையில் கார் ஓட்டுநர் இம்ரான் பாஷா உள்பட 5 பேரை கைது செய்தனர். தொடர்ந்து அவரது தம்பியான கவுஸ் ஆதம்பாஷாவையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த நிலையில், கவுஸ் ஆதாம் பாஷா ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. இந்தநிலையில் ஓட்டுநர் இம்ரான் பாஷா ஜாமீன் கேட்டவழக்கு நீதிபதி தமிழ்செல்வி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் வினோத் ஆஜராகி, டாக்டர் மஸ்தான் மரணம் தொடர்பான விசாரணை ஆரம்ப கட்ட இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். இதையடுத்து, ஓட்டுநர் இம்ரான் பாஷாவின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.