வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெற அடித்தளமிடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என திமுகவின் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது
திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. திமுகவின் பொதுக்குழுவிற்குப் பிறகு நடைபெறும் முதல் மாவட்டச்செயலாளர்கள் கூட்டமான இதில், புதியதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்டச்செயலாளர்கள் பேசுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
டெல்டா மாவட்டங்களில் வெற்றி பெற்றதைப் போல் சேலம், உள்ளிட்ட பகுதிகளிலும் வெற்றிபெற பாடுபடுவோம் என முதன்மைச்செயலாளர் கே என் நேரு உறுதியளித்துள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கட்டணமில்லா பேருந்தினால் பேருந்திற்கு செலவிட வேண்டிய தொகை சேமிப்பாக மாறியதால் மகளிர் மகிழ்ச்சியடைந்துள்ளதாக திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
இறுதியாக பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளில் கடந்தமுறை ஒன்றை இழந்துள்ளோம், இந்த முறை 40 தொகுதிகளையும் பெற அடித்தளமிட வேண்டும் என அறிவுறுத்தினார். கூட்டணியை பற்றி யாரும் கவலைப்பட வேண்டாம், வலுவான கூட்டணியுடந்தான் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம் என அவர் கூறியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மக்களிடமும், நிர்வாகிகளிடமும் மனுக்களை சிரித்த முகத்துடன் பெறுங்கள் எனவும் மாவட்டச் செயலாளர்களாக உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.