தமிழ்நாட்டில் அவதார்- 2 வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
2009ம் ஆண்டு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அவதார். இப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் இந்த மாதம் 16ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இப்படத்திற்கு தென்னிந்தியாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் இப்படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளதால் ஏற்கனவே மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் பல மடங்கு கட்டணத்தில் டிக்கெட் விற்கப்பட்டு வருகிறது. தற்போது விநியோகஸ்தர்கள் அதிக அளவு பங்குத் தொகை கேட்பதாக கூறப்படுகிறது.
அதாவது இப்படத்திற்கு 70 சதவீதம் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை திரையரங்கு உரிமையாளர்கள் ஏற்க மறுப்பதாகவும் கூறப்படுகிறது. இன்னும் வெளியீட்டிற்கு இரண்டு வாரங்கள் மட்டுமே இருப்பதால் பேச்சுவார்த்தை மூலம் சுமுக முடிவு எடுக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
ஏற்கனவே கேரளாவில் இதே நிலை நீடித்தால் அவதார் படத்தை திரையிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.







