அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே பேரரசர் ராஜேந்திரசோழன் அரண்மனையின் 30 அடுக்கு வரிசை கொண்ட செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தமிழக தொல்லியல்துறை சார்பில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரம் மாளிகைமேட்டில் தொல்லியல் அகழாய்வுப்பணிகள் கடந்த 1986 முதல் 1996 வரை 4 கட்டமாக தமிழக தொல்லியல்துறை சார்பில் ஏற்கனவே அகழாய்வுப் பணிகள் நடந்தது. இதில் மாளிகை மேட்டில் 250 ஆண்டுகளுக்கும் மேலாக பேரரசர் ராஜேந்திரசோழன் அரண்மனை கட்டி வசித்து வந்ததாக செப்பேடுகள் மூலம் அரியப்படுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது மீண்டும் கடந்த பிப்ரவரி மாதம் முதல் அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன.
இந்த அகழாய்வில் பழமையான 2 ஆயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட இரும்பு ஆணிகள், சீன மண்பாண்ட ஓடுகள் கூரை ஓடுகள், சிவப்புநிற பானை ஓடுகள், கண்ணாடி வளையல்கள் மற்றும் அரண்மனை இருந்ததற்கான சுவரும் கிடைத்தன. தொடர்ந்து நடைபெற்றுவரும் ஆய்வில் தற்பொழுது 7 முதல் 8 அடி ஆழம் வரை தோண்டப்பட்ட நிலையில் பேரரசர் ராஜேந்திரசோழன் வாழ்ந்த அரண்மனை கட்டடத்தின் 30 அடுக்கு வரிசைகொண்ட செங்கல் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.







