தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தின் தலைவராக திண்டுக்கல் லியோனி நியமனம்

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்…

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ. லியோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்களை தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காக, தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஓர் அரசு நிறுவனமாகும். இந்தக் கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கப்படுகின்றன.

ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் மற்றும் ஆங்கில வழிப் பாடநூல்கள், சிறுபான்மை மொழிப் பாட நூல்கள், மேல்நிலைப் பள்ளிக்கான தொழிற்கல்விப் பாடப்புத்தகங்கள், ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்கான பாடப்புத்தகங்கள் மற்றும் பல்நுட்பட கல்லூரிக்கான பாடப் புத்தகங்கள் ஆகியவற்றைத் தயாரிக்கும் பணியை இக்கழகம் மேற்கொண்டு வருகிறது. இதன் புதிய தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நியமித்து ஆணையிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த திண்டுக்கல் ஐ . லியோனி, சிறந்த ஆசிரியர், மேடைப் பேச்சாளர், இலக்கியச் சொற்பொழிவாளர், நகைச்சுவைப் பட்டிமன்ற நடுவர் ஆவார். இவருக்கு 2010 ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது தமிழக அரசால் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.