தேனியில் நேற்று பள்ளத்தில் விழுந்து ஹாசினி என்ற சிறுமி உயிரிழந்த சோகம் மறையாத நிலையில், இன்று திண்டுக்கல்லில் ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி சமத்துவபுரத்தில், நேற்று இயற்கை உபாதை கழிக்க சென்ற 8 வயது சிறுமி ஹாசினி, பூங்கா அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார். பேரூராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் சிறுமி ஹாசினி உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சிறுமியின் மரணத்தை மாவட்ட நிர்வாகம் மூடி மறைப்பதற்கான செயல்களில் ஈடுபட்டதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், இந்த சோகம் இன்னும் மாறாத நிலையில், திண்டுக்கல் அருகே 2 சிறுவர்கள் ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் தாமரைப்பாடி அருகே உள்ள கம்மாளப்பட்டி என்ற இடத்தில் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவிற்கு வந்த சிறுவர்கள் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது, அருகில் இருந்த ரயில்வே கேட் பகுதிக்கு லத்தீஸ் சினி என்ற 9 வயது சிறுவனும், சர்வின் என்ற 8 வயது சிறுவனும் சென்றுள்ளனர். அங்கு ரயில்வே பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிறுவர்கள் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளனர். பள்ளத்தில் மழைநீர் தேங்கியிருந்ததால் சிறுவர்கள் வெளியே வரமுடியாமல் மயங்கியுள்ளனர். பின்னர் தகவலறிந்து சென்ற உறவினர்கள் சிறுவர்களை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆனால், சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் லத்தீஸ் சினி மற்றும் சர்வின் இரண்டுபேரும் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ரயில்வே அதிகாரிகள் சிறுவர்கள் உயிரிழந்த இடத்தில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் சிறுவர்கள் உயிரிழப்பு குறித்து வடமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பணிகளுக்காக பள்ளம் தோண்டப்படும்போது, அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் அந்த பகுதியில் செல்லாத வகையில் தடுப்பு அல்லது எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பொதுமக்கள், அரசு பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் முறையான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தவில்லை என்றால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
– இரா.நம்பிராஜன்