நடிகர் தனுஷ் மகன் பைக் ஓட்டியதாக பரவிய வீடியோ தொடர்பாக, நடிகர் தனுஷ் வீட்டிற்கு சென்று தி.நகர் போக்குவரத்து உதவி ஆணையர் ராஜா தலைமையிலான போலீசார் விசாரணை செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நடிகர் தனுஷ் மற்றும் ரஜினி மகள் ஐஸ்வர்யா இருவருக்கும் காதல் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த ஒரு வருடமாக தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு ஆண் பிள்ளைகள். பள்ளிப்படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்வது, இருவரும் பிள்ளைகளுடன் தனியாக நேரம் செலவிடுவது என இவர்களது பெற்றோர்கள் நன்கு கவனித்துவருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்னும் பதினெட்டு வயது நிரம்பாத தனுஷின் மூத்த மகன் யாத்ரா பைக் ஓட்டும் புகைப்படம்தான் தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. போயஸ் கார்டன் பகுதியில் யாத்ரா R15 பைக்கை ஓட்டி பழகிக்கொண்டிருப்பதாக அந்த வீடியோவில் தெரிகிறது. அவருக்கு உதவியாளராக ஒருவர் சொல்லிக் கொடுக்கிறார். அவர் பைக் ஓட்டுவதை ஒருவர் வீடியோ எடுக்க உதவியாளர் போட்டோ, வீடியோ எடுக்காதீர்கள் என்று கூறியிருக்கிறார்.
இதைப் பார்த்த நெட்டிசன்கள் ‘18 வயதே ஆகவில்லை. அதற்குள் அப்படி பைக் ஓட்ட வேண்டும் என்றால் யாரும் இல்லாத இடத்தில் தான் ஓட்டி பழக வேண்டும். லைசென்ஸ் உரிமை இல்லாமல் இந்த பைக்கை ஓட்டி பழகுவது தவறானது. ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் சக வாகன ஓட்டிகளுக்கும் அது சிக்கல்’ என விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் ஒருசிலரோ, ‘மிகவும் மெதுவாக தெருக்களில் தான் அவர் ஓட்டி பழகுகிறார். கற்றுக்கொள்வது ஒரு தவறா?’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.







