தமிழ்நாட்டில் ‘பிரசாத்’ திட்டத்தின் கீழ் சுற்றுலாத் துறையில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற “தெற்காசிய சுற்றுலா & பயணங்கள் கண்காட்சியில்” தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். பின்னர் மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து தமிழ்நாட்டின் சுற்றுலா சார்ந்த திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன்,
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் “பிரசாத்” திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள 49.70 கோடி ரூபாய் திட்டம் தயாரிக்கப்பட்டு அதனை மத்திய அமைச்சரிடம் வழங்கியுள்ளதாக கூறினார்.
மேலும், தற்போது அந்த திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், இதே பிரசாத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை, திருத்தணி ஆகிய இடங்களை மேம்படுத்த கோரியும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட ரூ.49.70 கோடியில் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
அக்னி தீர்த்தம் (படித்துறை) ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான பார்க்கிங், நடைபாதை வசதிகள் அமைக்கப்படும் எனவும், ராமேஸ்வரம் நகரில் ( illumination ) ஒளிவூட்டம், படகு தளம் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “சுவதேஷ் தர்சன்” திட்டம் -2 மீண்டும் மத்திய அரசு செயல்படுத்த உள்ளதகாவும், அதற்கு தமிழகத்திலும் சில இடங்களை தேர்வு செய்து அனுப்ப உள்ளதாகவும், தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களில் ஒளி, ஒலி அமைக்க தமிழக முதலமைச்சர் உதரவிட்டுள்ள நிலையில் தொல்லியல் துறை அனுமதி வழங்கிட கோரியும் மத்திய அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறினார்.
இவை தவிர, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள இடங்களை விடியோ பதிவு செய்ய தமிழக அரசு முடிவு செய்த நிலையில் அதற்கு தொல்லியல் துறை கட்டணங்கள் விதித்து உள்ளது. அதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிகையும் முன்வைத்து உள்ளதாகவும், கொடைக்கானல் உள்ளிட்ட மலை பிரதேச சுற்றுலா தலங்களில் “மல்டி லெவல்” பார்க்கிங் எதிர்காலத்தில் அமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.









