பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத் நகரை சேர்ந்த குடும்பத்தினர், உறவினர்கள் 23 பேர் நேற்று மாலை பஞ்சாப் மாகாணம் பைசலாபாத்தில் உறவினரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் பங்கேற்க லாரியில் சென்றுள்ளனர். பாகிஸ்தானில் கடும் பனி மூட்டம் காரணமாக முக்கிய சாலைகள் மூடப்பட்டிருந்ததால் லாரி ஓட்டுநர் உள்ளூர் சாலை வழியாக சென்றுள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் மாகாணம் சர்கோதா மாவட்டம் கோட் மாமின் பகுதியில் உள்ள பாலத்தின் மேல் சென்ற போது இன்று அதிகாலை ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் தடுப்புகளில் மோதி கால்வாய்க்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் லாரியில் பயணித்த 6 குழந்தைகள் உள்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் 9 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்த 14 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து முதற்கட்ட விசாரணையில் கடும் பனிமூட்டம் காரணமாக விபத்து ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.







