உ.பி. வீடுகள் இடிப்புச் சம்பவம்: அரசு தரப்பு விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

உத்திரப்பிரதேசத்தில் வீடுகள் இடிப்பு சம்பவம் தொடர்பாக, அரசுதரப்பு 3 நாள்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது…

உத்திரப்பிரதேசத்தில் வீடுகள் இடிப்பு சம்பவம் தொடர்பாக, அரசுதரப்பு 3 நாள்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த நுபுர்சர்மா, நவீன் ஜிண்டால் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை டெல்லி, உத்தரப்பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்குவங்க மாநிலங்களில் போராட்டம் நடைபெற்றது. உத்தரப்பிரதேசத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரக்யராஜில் வன்முறைக்கு காரணமானவராகக் கூறப்படும் ஜாவேத் அகமது என்பவரின் வீடு புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டது. முறையான அனுமதி பெறாமல் வீடு கட்டப்பட்டதால் இடிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்துள்ளார். காவல் துறையினர் மீது கல் வீசி தாக்கிய புகாருக்கு ஆளான மேலும் இருவரின் வீடும் கான்பூரில் இடிக்கப்பட்டது.

வீடுகள் இடிப்பதை தடுக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா ஐ ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, விக்ரம்நாத் ஆகியோர் அமரவின் முன்பு இவ்வழக்கு விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கு விசாரணையில், இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், உத்திரப்பிரதேசத்தில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை உரிய விதிகளைப் பின்பற்றி இடிக்க வேண்டும். விதிகளைப் பின்பற்றாமல் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதை அனுமதிக்க முடியாது. வீடுகள் இடிக்கப்பட்டது தொடர்பாக மாநில அரசு 3 நாள்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வீடுகளை இடிக்க இடைக்காலத் தடை விதிக்க முடியாது , பழிவாங்கும் நடவடிக்கையாக வீடுகளை அகற்றக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.