டெல்லியில் முழு ஊரடங்கு வரும் 17 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமாக பரவி வருகிறது. நாளுக்கு நாள் இந்த தொற்று காரணமாகப் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து, டெல்லி, கேரளா, தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் முழு ஊரடங்கை விதித்துள் ளன.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 4 லட்சத்து 03 ஆயிரத்து 738 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 22 லட்சத்து 96 ஆயிரத்து 414 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பு காரணமாக ஒரே நாளில் 4,092 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 42 ஆயிரத்து 362 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 3 லட்சத்து 86 ஆயிரத்து 444 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்பை சமாளிக்க டெல்லியில் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து இந்த ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இப்போது மூன்றாவது முறையாக முழு ஊரடங்கை நீட்டித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் டெல்லியில் மெட்ரோ ரயில் சேவைகளும் இருக்காது என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.







