டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு 25,000ஐ கடந்து வரும் நிலையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டிருந்த புள்ளிவிவரங்களின்படி கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், டெல்லியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் 200ல் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது நாளொன்றுக்கு 25,000ஐ கடந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 27,047 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஏற்கெனவே அமல்படுத்தப்பட்டிருந்த லாக்டவுன் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 19 முதல் டெல்லியில் லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டாவது முறையாக நீட்டிக்கப்படுகிறது. முன்னதாக பேட்டியளித்திருந்த கெஜ்ரிவால், கொரோனா தொற்று நகரத்தில் நீடித்து வருகின்ற காரணத்தினால், பொதுமக்கள் லாக்டவுனை நீட்டிக்க கோரியுள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் 375 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கையானது ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது. கடந்த நவம்பரில் இந்த எண்ணிக்கையானது 44,000ஆக இருந்தது.
இந்த தொடர் உயர்வு காரணமாக மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. ஆக்சிஜன் கி்டைக்க 80 நிமிடம் தாமதமானதால் இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த வாரத்தில் 25 பேர் இந்த பிரச்னையால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் பின்னணியில் டெல்லி கெஜ்ரிவால் அரசு லாக்டவுனை மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ளது.







