புதுக்கோட்டையில் ரூ.5 லட்சம் பர்சனல் லோன் தருவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி செய்த டெல்லி கும்பலை போலீசார் கூண்டோடு கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்தவர்
கனிக்குமார். இவரது தொலைபேசி எண்ணுக்கு கடந்த ஜூலை 2 ஆம் தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அதில், ஆவணங்கள் மட்டும் இருந்தால் போதும் லட்சக்கணக்கில் தனி நபர் லோன் கொடுக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றே அந்த எண்ணைத் தொடர்பு கொண்ட கனிக்குமார், தனக்கு ரூ.5 லட்சம் தனி நபர் கடன் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து, இரண்டுக்கும் மேற்பட்ட எண்களில், தனலெட்சுமி பைனான்ஸில் இருந்து பேசுகிறோம் என்று அடுத்தடுத்து கனிக்குமாரைத் தொடர்பு கொண்டவர்கள், அவரது ஆதார் கார்டு, பான் கார்டு, வாக்காளர் அட்டை போன்ற ஆவணங்களை வாட்ஸ் அப் மூலம் அனுப்பக் கோரியுள்ளனர். அவரும் தன்னிடம் இருந்த ஆவணங்கள் அனைத்தையும்
அனுப்பியுள்ளார்.
அடுத்த சில தினங்களில் மீண்டும் கனிக்குமாரைத் தொடர்பு கொண்டவர்கள், தங்களது லோன் அப்ரூவல் ஆகிவிட்டது. அதற்கான, டாக்குமெண்ட் சார்ஜ், இன்ஸ்யூரன்ஸ், உங்களுடைய அக்கவுண்டில் வரவு வைக்க டி.டி எடுக்கும் செலவு கட்டணங்களை கட்ட வேண்டும். அப்போது தான் லோன் ஓகே ஆகும் என்று கூறி அக்கவுண்ட் நம்பரை அனுப்பியுள்ளனர். லோன் கிடைத்துவிடும் என்ற ஆசையில் ரூ.2,03,100 பணத்தினை அவர்கள் கொடுத்த வங்கிக் கணக்கில் கனிக்குமார் செலுத்தியிருக்கிறார். ஆனால், அவருக்கு லோன் பணம் கிடைக்கவில்லை.
இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கனிக்குமார், புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சைபர் கிரைம்
போலீசார், தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். குற்றவாளிகளின் வங்கிக் கணக்கு விபரங்கள், மொபைல் எண்களை டிராக் செய்த போது, டெல்லியைச் சேர்ந்த 5 பேர் கூட்டாக சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, டெல்லி சென்ற புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசார், டெல்லியைச் சேர்ந்த ரகுபதி, முகமது எஸ்தாக், முகமது சாபி ஆலம், பாலாஜி, பிரியா ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். மோசடிக்கு பயன்படுத்திய லேப்டாப், ஆன்ட்ராய்டு போன்கள், சிம்கார்டுகள், எ.டி.எம் கார்டு, ரொக்கப்பணம் ரூ.5000 உள்ளிட்டவற்றைக் கைப்பற்றினர்.
தொடர்ந்து, குற்றவாளிகளை, புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
சிறையில் அடைத்தனர். வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த
சைபர் கிரைம் காவல் நிலைய தனிப்படையினரை புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே பாராட்டினார். தமிழகத்தைச் சேர்ந்த இன்னும் சிலரிடம் இந்த கும்பல் தனி நபர் கடன் தருவதாக ஆசை காட்டி மோசடியில் ஈடுபட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.