கத்தாரில் 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து – வெளியுறவுத் துறை தகவல்

கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கான மரண தண்டனை, சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. கத்தார் ராணுவத்துக்குப் பயிற்சி மற்றும் பிற சேவைகளை அளித்து வரும்…

கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கான மரண தண்டனை, சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

கத்தார் ராணுவத்துக்குப் பயிற்சி மற்றும் பிற சேவைகளை அளித்து வரும் ‘தஹ்ரா ‘ என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் 8 பேர்,  அந்நாட்டின் ரகசிய கடற்படை திட்டங்களை இஸ்ரேலுக்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் கேப்டன் நவ்ஜீத் சிங் கில்,  கேப்டன் வீரேந்திர குமார் வர்மா,  கேப்டன் சௌரவ் வசிஷ்ட்,  கமாண்டர் அமித் நாக்பால்,  கமாண்டர் புரேந்து திவாரி,  கமாண்டர் சுகுநாகர் பகலா,  கமாண்டர் சஞ்சீவ் குப்தா,  கடற்படை வீரர் ராகேஷ் கோபகுமார் ஆகிய 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு குறித்து அதிர்ச்சியை வெளிப்படுத்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்,  கடற்படை அதிகாரிகளின் விடுதலைக்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் இந்தியா மேற்கொள்ளும் எனத் தெரிவித்தது. இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த மேல்முறையீட்டு மனு கத்தார் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்த நிலையில், இந்தியர்கள் எட்டு பேரின் மரண தண்டனை, சிறைத் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `

`தஹ்ரா குளோபல் வழக்கில் கத்தார் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் இன்றைய தீர்ப்பை நாங்கள் கவனித்தோம், அதில் தண்டனைகள் குறைக்கப்பட்டிருக்கின்றன.விரிவான தீர்ப்புக்காகக் காத்திருக்கிறோம். கத்தாருக்கான எங்கள் தூதர் மற்றும் பிற அதிகாரிகள், சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்களுடன் நேற்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இந்த விவகாரத்தின் ஆரம்பம் முதல் அவர்களுக்கு (சம்பந்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள்) நாங்கள் ஆதரவாக இருந்தோம். மேலும், அனைத்து தூதரக மற்றும் சட்ட உதவிகளையும் நாங்கள் தொடர்ந்து வழங்குவதோடு, கத்தார் அதிகாரிகளுடன் சேர்ந்து இந்த விஷயத்தை முன்னெடுத்துச் செல்வோம்” என்று கூறப்பட்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.