இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்ஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தார்.
உலகில் நீண்ட காலம் ராணியாக இருந்தவர் என்று பெருமைக்குரியவர் இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நடப்பது மற்றும் நிற்பதற்கு சிரமப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது
அண்மையில் ஸ்காட்லாந்து சென்று இருந்த அவர், பிரிட்டன் பிரதமராக இருந்து ராஜினாமா செய்த போரிஸ் ஜான்சனுக்கு நடந்த பிரிவுபசார விழாவில் கலந்து கொண்டிருந்தார். இந்த விழாவில் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டு இருக்கும் லிஸ் டிரஸ்சையும் சந்தித்தார். இன்று மாலை அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டது. கடந்த 8ந்தேதி இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடி இங்கிலாந்து பிரதமர் லிஸ் டிரஸ்ஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொண்டார். மேலும் பிரதமர் மோடி புதிதாக பிரதமராக பொறுப்பேற்றுள்ள லிஸ் டிரஸ்ஸூக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டதோடு லிஸ் டிரஸ் இங்கிலாந்தின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந்த போது அவர் செய்த பணிகளை பாராட்டினார். மேலும் இருநாட்டு உறவு குறித்தும் அவர் கலந்துரையாடியதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.








