29.7 C
Chennai
May 20, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

அணை பாதுகாப்பு மசோதா; மத்திய அரசு பதில் மனு.

அணைகள் பாதுகாப்புச் சட்டத்தில் மாநில அரசு உரிமைகள் ஒருபோதும் பறிக்கப்படாது என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.

அணைப்பாதுகாப்பு மசோதா எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. அதைதொடர்ந்து டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இந்த சட்டத்தை எதிர்த்து திமுக எம்.பி ராமலிங்கம் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அந்த மனுவில் மாநில அரசின் அதிகார வரம்பில் உள்ள அணைகள் பாதுகாப்பு தொடர்பாக சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என்றும் இந்த சட்டத்தின் மூலம் தேசிய அணைகள் பாதுகாப்பு குழு மற்றும் தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் ஆகிய இரண்டு அமைப்புகளை ஏற்படுத்தி நாடு முழுவதும் உள்ள முக்கிய அணைகளை தங்கள் கட்டுப்பாட்டில் எடுக்கும் வகையில் மத்திய அரசு இந்த சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நிலுவையிலுள்ள நிலையில் மத்திய அரசின் நீர்வளத் துறை துணை ஆணையர் ரவிநாத்சிங் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், 5,334 பெரிய அணைகள் உள்ளதாகவும் இதில் 227 அணைகள் நூறு ஆண்டுகளுக்கு மேலானவை என்றும் தற்போது 411 அணைகள் கட்டப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணைகளின் பாதுகாப்பு, பராமரிப்பு, கண்காணிப்பை உறுதி செய்யவும், அணைகளில் விபத்துக்களை தவிர்க்கவும், மக்கள் மற்றும் விலங்குகள், தாவரங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் பொது நலத்துடன் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, பெரும்பாலான அணைகள், இரு மாநிலங்களுக்கு இடையில் ஓடும் நதிகளின் குறுக்கே கட்டப்படுள்ளதாகவும், இந்த அணைகளின் பாதுகாப்பு என்பது ஒரு மாநிலத்திற்கு மட்டுமல்ல, மற்ற மாநிலங்களுக்கும் முக்கியமானது என்வும் ஒவ்வொரு மாநிலமும் தங்கள் எல்லையை தாண்டி அமல்படுத்தும் வகையில் சட்டம் இயற்ற முடியாது என்பதாலும், நாடு முழுவதும் பொருந்தும் வகையில் இந்த சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், அதற்கு நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 டிசம்பர் முதல் அமலுக்கு வந்துள்ள இந்த சட்டத்தின் கீழ், பெரிய அணைகளின் பாதுகாப்பை மேம்படுத்த மத்திய நதி நீர் ஆணையத்தின் மூலமாக மத்திய அணை பாதுகாப்பு அமைப்பும், அணை பாதுகாப்புக்கான மத்திய குழுவும் அமைக்கப்படும் எனவும், இந்த இரு அமைப்புகளும் அணைகளின் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின் மூலம் அணைகளின் தரத்தை மேம்படுத்தவும், பாதுகாக்கவும் மத்திய மாநில அரசு அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கும் வகையில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களின் மற்றும் மக்களின் நலனை பாதுகாக்கும் வகையிலேயே இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணையின் உரிமை, செயல்பாடு மற்றும் பராமரிப்பு விவகாரங்களில் இந்த சட்டம் எந்த மாற்றத்தையும் செய்யப் போவதில்லை என்றும் இரு அமைப்புகளிலும் மாநில அரசுகளின் பிரதிநிதிகளும் இடம் பெறுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.இச்சட்டத்தால் மாநில அரசின் அதிகாரம் ஒருபோதும் பறிக்கப்படாது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.இதையடுத்து வழக்கு விசாரணையை ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்கு தலைமை நீதிபதி அமர்வு தள்ளிவைத்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading