பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் தகவல்

கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அந்தமான் மற்றும் வங்கக்கடல் பகுதியில்…

கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு பருவமழை கால முகாம்களை அதிகப்படுத்த நடவடிக் கை எடுக்கப்பட்டுள்ளதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

அந்தமான் மற்றும் வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக உள்ள நிலையில் அது குறித்து தமிழக அரசு செய்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து விளக்க சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் வழக்கமாக அடுத்த மாதம் தொடங்கும் பருவ மழை, இந்த வருடம் முன்கூட்டியே ஆரம்பிப்பதாக தெரிவித்தார். வரும் 22ம் தேதி அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழத்த தாழ்வு பகுதி உருவாகி அது 24ம் தேதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாக தெரிவித்த அவர், இதன் தாக்கத்தால் கடலோர மாவட்டங்கள் மற்றும் நீலகிரி, தேனி, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவித்தார்.

மழை வெள்ளதால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முகாம்கள் அமைக்கப்படும் எனவும் கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு முகாம்களில் தனிநபர் இடைவெளி கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இதற்காக முகாம்களின் எண்ணிக்கை அதிகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களை திரும்பி வரச் சொல்லி செயற்கைக்கோள் தொலைபேசி மூலம் அறிவுறுத்தி இருப்பதாகவும் கடலுக்கு சென்ற 45நாட்டு படகுகளில் 27 திரும்பியுள்ளதாகவும் 18படகுகள் திரும்பிவிடும் எனவும் கூறினார். நீலகிரிக்கு பேரிடர் மீட்பு படையை அனுப்பியுள்ளதாக தெரிவித்த அவர், புயலை எதிர்கொள்ள மாநில மற்றும் மத்திய பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளதாகவும், முன்னெச்சரிக்கையாக இருக்க அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.