தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு – முழு விவரம்

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “செப்.1 முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளும்,…

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “செப்.1 முதல் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பள்ளிகளும், அனைத்துக் கல்லூரிகளும் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி. கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடற்கரையில் உள்ள பணியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட மாநகராட்சி அல்லது மாவட்ட ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “நீச்சல் குளங்கள் விளையாட்டு பயிற்சிகளுக்காக மட்டும் 50% பயிற்சியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதில் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள மதுக்கூடங்கள் செயல்பட அனுமதி. நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மழலையர் காப்பகங்கள் செயல்பட அனுமதி. காப்பாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம்.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அங்கன்வாடி மையங்கள் செப்.1 முதல் மத்திய உணவு வழங்குவதற்காக செயல்பட அனுமதி. ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பது கட்டாயம். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மற்றும் மகளிர் மேம்பாட்டுக் கழகம் மூலம் வேலைவாய்ப்பு பயிற்சிகள் நடத்த அனுமதி. தகவல் தொழில்நுட்பம் / தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதி. உயிரியல் பூங்காக்கள், தாவரவியல் பூங்காக்கள், படகு இல்லங்கள் ஆகியவை செயல்படும்.” என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.