இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு 208 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருக்கோயில்களில் நடத்தப்பட்டுள்ள குடமுழுக்கு தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ள தகவலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் உள்ள புராதனமான மற்றும் தொன்மையான திருக்கோயில்களைத் தொன்மை மாறாமல் புதுப்பித்து திருப்பணிகள் முடிந்து குடமுழுக்கு நடத்த அறிவுரை வழங்கியுள்ளார், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆகம விதிப்படி ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட வேண்டும். அதனடிப்படையில், கட்டடங்களின் கட்டுமானம், பழுதுபார்த்தல், பாதுகாத்தல், பேணிக்காத்தல், மீட்டெடுத்தல், மற்றும் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் திருப்பணியில் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வரலாற்றுச் சிறப்பும் தொன்மையும் கொண்டு ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் போற்றிப் பாடப்பட்ட திருக்கோயில்கள் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களின் திருப்பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் நடத்த ஒப்புதல் அளிக்கப்பட்டு 07.05.2021 முதல் 17.06.2022 வரை 208 திருக்கோயில்களில் திருப்பணி நிறைவுற்று குடமுழுக்கு விழாக்கள் நடத்தப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் 23.06.2022 முதல் 31.07.2022 வரையுள்ள வரும் காலத்தில் 30 திருக்கோயில்களுக்கு திருக்குட முழுக்கு நடத்தப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.