அஸ்ஸாமில் பெய்து வரும் கனமழை மற்றும் பெருவெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 82 ஆக அதிகரித்துள்ளது.
அஸ்ஸாமில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
34 மாவட்டங்கள், 5 ஆயிரத்து 424 கிராமங்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால், 41 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
குறிப்பாக அஸ்ஸாமின் பார்பெட்டா மாவட்டத்தில் 12.30 லட்சம் பேரும், டர்ரங் மாவட்டத்தில் 4.69 லட்சம் பேரும், நாகோன் மாவட்டத்தில் 4.40 லட்சம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அஸ்ஸாம் அரசு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 810 தற்காலிக முகாம்களில் 2 லட்சத்து 32 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
கரிம்கஞ்ச் உள்பட பல மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, அவை தற்காலிக முகாம்களாக மாற்றப்பட்டுள்ளன.
நல்பாரி மாவட்டத்தில் உள்ள முகாம்களுக்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வாஸ், அங்கு மக்களுக்கு அளிக்கப்படும் நிவாரணங்கள் குறித்து கேட்டறிந்தார்.
கால்நடைகள் இறப்பு, பிற சேதங்கள் உள்ளிட்டவற்றை மக்கள் தாங்களே ஆன்லைனில் பதிவு செய்வதற்கான இணையதளம் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்த முதலமைச்சர், வெள்ள நிவாரணம் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இதனிடையே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மாநில முதலமைச்சர்களுடன் இன்று தொலைபேசியில் பேசியதாகவும், வெள்ள பாதிப்புகள் குறித்து கேட்டறிந்ததாகவும் உள்தறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும், பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்வதற்காக இவ்விரு மாநிலங்களுக்கும் மத்திய குழு விரைவில் அனுப்பிவைக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அஸ்ஸாம் மற்றும் மேகாலயா மக்களின் துயர்களைத் துடைக்க நரேந்திர மோடி அரசு உறுதி அளிப்பதாகக் கூறியுள்ளார்.