சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – ஒரே நாளில் 1 லட்சம் பேர் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 909 பேர் சாமி தரிசனம் செய்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை…

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நேற்று ஒரே நாளில் 1 லட்சத்து 909 பேர் சாமி தரிசனம் செய்தனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டது.  நடை திறக்கப்பட்ட மறுநாளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  தங்க அங்கியுடன் கூடிய ஊர்வலம் டிச.23-ம் தேதி காலை ஆரன்முளா ஸ்ரீ பார்த்தசாரதி கோயிலிலிருந்து புறப்பட்டது.

தொடர்ந்து இன்று (டிச.26) மாலை தங்க அங்கி ஊர்வலம் சன்னிதானம் வந்தடைவதால்  பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று மாலை 3 மணிக்கு பதிலாக 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.   தங்க அங்கி ஊர்வலத்தை தேவசம் அதிகாரிகள் வரவேற்று பின்னர் தங்க அங்கியை கோயில் கருவறைக்குள் எடுத்து செல்வர்.

இதையும் படியுங்கள்:  சென்னை வானகரத்தில் இன்று அதிமுக பொதுக்குழு கூட்டம்! நாடாளுமன்ற தேர்தல் குறித்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்ற வாய்ப்பு!

தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு தீபாராதனை நடைபெறும்.   மேலும், நாளை (டிச.27) காலை 10.30-11.30 மணியளவில் மண்டல பூஜை நடைபெறும்.  மண்டல பூஜையை முன்னிட்டு காலை நெய்யபிஷேகம் நடைபெறும்.  தொடர்ந்து  இரவு 10 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு மண்டலக்காலம் நிறைவு பெறும்.

மீண்டும் டிச.30-ம் தேதி மாலை மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படும்.  மண்டல பூஜையை ஒட்டி இன்று (டிச.26) மற்றும் நாளை (டிச.27) ஆன்லைன் முன் பதிவு செய்ய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.  இன்று 64,000 பக்தர்கள் மற்றும் நாளை 70,000 பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு மூலம் செல்ல முடியும்.  இந்த நிலையில் நேற்று (டிச.25) ஒரே நாளில் 1 லட்சத்து 909 பேர்,  சுமார் 20 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.