ஜெயக்குமார் மரண வழக்கு – முன்னாள் மத்திய அமைச்சர் தங்கபாலுவிடம் விசாரணை!

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும்,  முன்னாள்  மத்திய அமைச்சருமான கே.வி.தங்கபாலுவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.  திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள…

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும்,  முன்னாள்  மத்திய அமைச்சருமான கே.வி.தங்கபாலுவிடம் தனிப்படை போலீசார் இன்று விசாரணை நடத்தினர்.  திருநெல்வேலி வண்ணாரப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்த விசாரணை நடைபெற்றது.

முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் கே.வி.தங்கபாலு செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது அவர் கூறியதாவது:-

“காவல்துறையினர் அழைப்பானை அனுப்பி உள்ளனர்.  அதற்காக வந்துள்ளேன்.  இப்போது இந்த வழக்கு தொடர்பாக எந்த கருத்தும் சொல்ல விரும்பவில்லை.  காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் ஜெயக்குமாரின் மரணம் கொலை அல்லது தற்கொலை எதுவாக இருந்தாலும் அது வருத்தத்திற்குரியது.   அவரது குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த செயல் நடந்திருக்கக் கூடாது.  இதைப் பற்றிய முழுமையான தகவல்களை காவல்துறை முழுமையாக விசாரித்து வருவதாக அறிகிறேன்.  தமிழக காவல்துறை மிக சிறந்த முறையில் பணியாற்றக் கூடியது.  நமது காவல்துறை உலகப்புகழ் பெற்ற காவல் துறை என்று பெயர் பெற்றது என்பது அனைவரும் அறிவோம்.

அவர்கள் உரிய முறையில் விசாரணை செய்வார்கள் என்று நாம் நம்புவோம்.  விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும்.  உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பது எங்களுடைய கருத்து காங்கிரஸ் கட்சியின் கருத்து” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.