நீர்நிலைகள் ஆக்கிரமிப்பில் நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிவகாசியை சேர்ந்த ஆனந்த் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சிவஞானம், ஆனந்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், நீர்நிலை ஆக்கிரமிப்பு குறித்து நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு இருக்காது என தெரிவித்தனர். மேலும் பழங்கால நீர்நிலைகளை பாதுகாப்பது மாநிலத்தின் கடமை என்றும் நீர் நிலைகளுக்கும், இயற்கைக்கும் அறங்காவலராக மாநிலங்கள் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
மேலும் மனுதாரர் ஆனந்த் குறிப்பிட்டுள்ள இடம், புறம்போக்கு இடமாக மாற்றப்பட்டு அங்கு நுண்ணிய உர மையம் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துவிட்டது, எனவே, மழைக்காலங்களில் நுண்ணிய உரம் மையத்தினால் நீர்நிலைகளுக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதை சிவகாசி நகராட்சி உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். மேலும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் குறிப்பிட்ட கால இடைவெளியில் சம்பந்தப்பட்ட இடத்தினை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கூறி வழக்கை முடித்து வைத்தனர்.







