மாணவி லாவண்யா உயிரிழப்பு குறித்து சக மாணவர்களுடன் விசாரணை செய்ததில், மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யாவை, மதம் மாற வற்புறுத்தி, கழிவறையை சுத்தம் செய்யச் சொல்லி துன்புறுத்தி, மாணவி லாவண்யாவின் இறப்புக்கு காரணமான பள்ளி நிர்வாகத்தினரை கண்டித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாஜக வலியுறுத்தியது.
ஆனால் உயிரிழப்புக்கு முன் லாவண்யா பதிவிட்ட வீடியோவில் தன்னை ஊருக்கு செல்லவிடாமல், கனகு பார்க்கும் வேலைகளை கொடுப்பதாகவும், தனக்கு உடல் நலம் குறைவாக இருந்தாலும் தன்னை வீட்டிற்கு செல்லவிடுவதில்லை எனவும் தெரிவித்திருந்தார். மத மாற்றத்தை பர்றி மாணவி எதுவும் குறிப்பிடவில்லை. இதனால் பாஜகவின் தெரிவித்த கருத்திற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தது.
லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், இதுகுறித்து, மாணவி லாவண்யாவுடன் பயின்ற 30-க்கும் மேற்பட்ட சக மாணவர்களிடம் துறை சார்ந்த விசாரணை நடத்தப்பட்டது
இந்நிலையில், மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை எனவும், மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள், அதற்கான விலையைத் தந்தே ஆக வேண்டும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார். இதில் முதற்கட்டமாக விடுதி காப்பாளர் கைது செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும், பள்ளிகளில் மாணவர்களுக்கு ஏதேனும் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தால், உடனடியாக ஹெல்ப்லைன் மூலம் புகார் அளிக்கலாம் எனவும் அவர் கூறினார்.