நடிகை அமலாபால் கொடுத்த புகாரின் பேரில் பிரபல பாடகரும், திரைப்பட பைனான்சியருமான பவ்னீந்தர் சிங் தத்தா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் மேலிடம் கொடுத்த பிரஷர் காரணமாக பல்வேறு சட்டவிதிகளையும் காற்றில் பறக்கவிட்டு அவசரமாக வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. “கடாவர்” படத்திற்காக தான் தான் பலகோடி முதலீடு செய்ததாகவும், இந்த பணத்தை திருப்பி கேட்டதால்தான் தன்னை பொய்வழக்கில் சேர்த்து கைது செய்துள்ளதாகவும் போலீசாரிடம் புலம்பியுள்ளார். 
கைதான காதலர்
தமிழ் திரையுலகில் பல்வேறு பிரபல கதாநாயகர்களுடன் நடித்து புகழ் பெற்றவர் அமலாபால். இவருக்கும், டைரக்டர் ஏ.எல்.விஜய்க்கும் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. சில ஆண்டுகளில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதில் இருவரும் பிரிந்துவிட்டனர். இதன்பின்னர் கடந்த 2020ம் ஆண்டு பஞ்சாபில் பிரபல பாடகரான பவ்னீந்தர் சிங் உடன் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்வதாக கூறி நிச்சயதார்த்தமும் நடந்தது. ஆனால் சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாபால் கொடுத்த புகாரின் பேரின் பிரபல பாடகர் பவ்னீந்தர் சிங் உள்ளிட்ட 12 பேர் மீது விழுப்புரம் குற்ற பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்ததோடு பவ்னீந்தர் சிங்ஐ கைது செய்து கோர்ட்டிலும் ஆஜர் படுத்தி சிறையிலும் அடைத்துவிட்டனர்.
போலீசிடம் புலம்பிய பவ்னீந்தர்
இந்த வழக்கு பதிவு மற்றும் கைது சம்பவத்தில் பல்வேறு சர்ச்சைகளும், கண்டனமும் எழுந்துள்ளது. காரணம் கைது செய்யப்பட்ட பவ்னீந்தர் சிங்கும் தானும் நெருக்கமாக இருந்த போட்டோக்களை வெளியிட போவதாகவும், அதை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என தன்னை மிரட்டியதாக அமலா பால் புகார்மனுவில் கூறியிருந்தார். இது போன்ற பாலியல் புகார்களோ, ஐ.டி பிரிவின்கீழ் தொடரப்படும் வழக்கில் சம்பந்தப்பட்ட பெண் போலீசில் ஆஜராகி புகார் மனு கொடுப்பதுடன், வாக்குமூலம் கொடுக்கவேண்டும். நேரில் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் வழக்கு பதிவு செய்யவேண்டும். ஆனால் அமலாபால் சார்பாக அவரது வக்கீல் கொடுத்த புகார் மனு அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு இந்த வழக்கு குறித்து வடக்கு மண்டலா ஐ ஜி, விழுப்புரம் மண்டல டிஐஜி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கூட எந்த தகவலும் தராமல் நேரடியாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி க்கு டிஜிபி அலுவலகத்தில் இருந்தே உத்தரவு பறந்துள்ளது. இதன் அடிப்படையில் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டு 16 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அதிகாலையில் பவ்னீந்தர் சிங்கை அவசர அவசரமாக கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 
நேரில் வராத புகார்தாரர்
புகார்மனுதாரர் நேரில் புகார் கொடுத்து வாக்குமூலம் தராத நிலையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படவும் வாய்ப்புள்ளது. இதேபோல கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்து செல்லும்போது கைது செய்யப்பட்ட பவ்னீந்தர் சிங் போலீசாரிடம் கூறும்போது, அமலாபால் நடித்து சமீபத்தில் வெளியான “கடாவர்” படத்திற்கே அதிகமாக நான்தான் பைனான்ஸ் செய்துள்ளேன். அந்த பணத்தைத்தான் திரும்ப கேட்டேன். ஆனால் போட்டோ வெளியிடுவதாக மிரட்டி நான் பணம் கேட்டதாக பொய்ப்புகார் தரப்பட்டு அவசரமாக கைது செய்துள்ளனர். நான் மிரட்டி பணம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே நல்ல பண வசதி உள்ளது. என்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டதற்கு மேலிட செல்வாக்கை பயன்படுத்தி என் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது என பவ்னீந்தர் சிங் புலம்பி தீர்த்துள்ளாராம்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சரக அதிகாரிகளிடம் கூட தகவல் சொல்லாமல் உடனடியாக வழக்கு பதிவு செய்து கைது செய்ய மாவட்ட எஸ்பிக்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கண்டிப்பாக ஆட்சி அதிகார மட்டத்தில் உள்ளவர்கள்தான் இந்த விஷயத்தில் தலையிட்டிருக்க வேண்டும் என்கின்றனர் காவல்துறையினர்.
– சிவ செல்லையா








