கன்னியாகுமரியில் கோயிலில் திருடப்பட்ட நகைகளை பங்கு பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் கட்டட தொழிலாளி ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியை சேர்ந்தவர் கட்டட தொழிலாளி ஞானசேகர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன்னுபொத்தை என்னும் பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவரது கூட்டாளிகளே அவரை கத்தியால் குத்தியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் விசாரணை நடத்தியதில் அவரும் அவருடைய கூட்டாளிகளும் வடக்கூர் மருந்துபுரை இசக்கி அம்மன் கோயிலில் உள்ள வெள்ளி கிரீடத்தை திருடியது தெரியவந்தது. இதனை பங்கு பிரிப்பதில், ஞானசேகருக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, ஞானசேகரை, அவரது கூட்டாளிகள் தனியாக அழைத்துச் சென்று அடித்து கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.







