தமிழ்நாட்டை, தமிழகம் என்று குறிப்பிட்டதற்கான விளக்கத்தை, ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ள நிலையில், அதனை வரவேற்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை பாராட்டும் நிகழ்வில் உரை நிகழ்த்திய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என தெரிவித்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அவர் கூறிய கருத்தை கண்டிக்கும் விதமாக, #தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டானது. இந்நிலையில், தமிழ்நாடு என்பதை தமிழகம் என்று குறிப்பிட்டதற்கான விளக்கத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்துள்ளார். அவரது விளக்கத்தை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
இதனை வரவேற்று சட்டமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவருமான செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “இன்று தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு, தமிழகம் சர்ச்சைக்கு ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மிகவும் சிறப்பு. வரவேற்கத்தக்கது விஷயம்.
இதேபோல, தமிழ்நாட்டின் நலன் கருதி சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலோடு அனுப்பி வைக்கப்பட்ட மசோதாக்களுக்கும் காலம் கடத்தாமல் உடனே ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளிக்கவேண்டும். தமிழ்நாட்டின் மக்களின் உயிரோடு விளையாடும் ஆன்லைன் ரம்மி, நீட் போன்ற முக்கிய மசோதாக்களும் அதில் அடங்கும்.
இவற்றிற்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம் தமிழ்நாடு மக்களின் உயிர், பொருள் ஆகியவற்றின் மீது அக்கறையுள்ள, அவர்களின் நலனுக்கு முன்நிற்கும் ஆளுநர் என்ற பெரும் பெயர் பெறுவார். மக்களும் ஆளுநரை வாழ்த்துவார்கள். நல்ல ஆளுநர் என்ற பெயர் பெறுவாரா? காத்திருக்கிறோம்.
மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசின் கொள்கைகள், செயல்பாடுகளில் ஆளுநர் அவர்கள் மூக்கை நுழைக்காமல் இருப்பது நல்லது. இதனால், ஆட்சியாளர்களுக்கும், ஆளுநர்களுக்கும் இடையே பரஸ்பரம் நல்ல புரிந்துணர்வு ஏற்படும்”. இவ்வாறு செல்வப்பெருந்தகை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.