இமாச்சலப் பிரதேசத்தில் 40 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இமாச்சலில் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
இமாச்சலப் பிரதேச தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தொடக்கத்தில் இருந்தே பாஜகவும் காங்கிரசும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தன. இறுதியில், மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்றது. தற்போது அங்கு ஆளும்கட்சியாக உள்ள பாஜக, 25 இடங்களை கைப்பற்றி உள்ளது. சுயேட்சை வேட்பாளர்கள் மூன்று தொகுதிகளை கைப்பற்றினர்.
இந்த வெற்றியின்மூலம் இமாச்சல பிரதேசத்தில் எந்த கட்சியும் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியதில்லை என்ற வரலாறு, மீண்டும் அங்கு நிரூபணம் ஆகியுள்ளது. இதையடுத்து தற்போதைய முதலமைச்சராக உள்ள ஜெய்ராம் தாக்கூர், தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார்.
இமாச்சலில் வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும் என உறுதியளித்துள்ளார்.








