டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு! முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.  டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது.  இந்த உரிமம்…

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால். 

டெல்லி 32 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானம் விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட்டது.  இந்த உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும்,  100 கோடி ரூபாய் கைமாறியதாகவும் எழுந்த புகார் மீதான விசாரணையில் கலால் துறை அமைச்சராக இருந்த மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக  குற்றச்சாட்டு எழுந்தது.  இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ள அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.  அதில் விசாரணைக்கு ஆஜராகுமாறு தெரிவித்திருந்தது.  ஆனால், சம்மனை வாங்க மறுத்த அரவிந்த் கெஜ்ரிவால், தனக்கு எதிராக சம்மன் அனுப்புவது சட்டவிரோதம் என தெரிவித்து சம்மனை திருப்பி அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து 5 முறை அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது.   ஆனால், அரவிந்த் கெஜ்ரிவால் விசாரணைக்கு ஆஜராகாமல் புறக்கணித்தார்.   5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாத அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு அளித்தது.

இதனிடையே 6வது முறையாக அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது.   அதில், வருகிற 19 ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி தெரிவித்துள்ளது.  இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையில்  நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.  நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் மீதான விவாதம் நாளை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.