“தெலுங்கானா காங்கிரஸ் அரசின் மாதிரியை மத்திய அரசு பின்பற்ற வேண்டும்” – மாணிக்கம் தாகூர்!

ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு தெலுங்கானா காங்கிரஸ் அரசு மாதிரியை, ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகளை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக, வீடுகளின் பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கவுள்ளது. அதற்கான படிவத்தில், “ஜாதி” என்ற கேள்விக்கு, மக்கள் குறிப்பிடும் ஜாதியின் பெயரை அப்படியே பதிவு செய்வது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மக்களிடம், “உங்கள் ஜாதி என்ன?” என்று கேட்டால், பெரும்பாலும் உட்ஜாதி பெயர்களையே குறிப்பிடுவார்கள். அந்தப் பெயர்கள் அரசின் பட்டியலில் இருக்காது. அவற்றை அப்படியே பதிவு செய்தால், பெரும் குழப்பங்கள் ஏற்படும். இதனால், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியதன் நோக்கமே நிறைவேறாமல் போய்விடும்.

எனவே, மக்கள்தொகை கணக்கெடுப்புப் படிவத்திலேயே ஜாதிகளின் பட்டியலை வழங்கி, அதில் அவரவர் ஜாதியைத் தேர்ந்தெடுக்கச் சொல்ல வேண்டும். கடந்த 2021ஆம் ஆண்டு, தெலுங்கானா மாநில காங்கிரஸ் அரசு மிகச் சிறப்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்தது. அது நாடு முழுவதும் பெரும் பாராட்டைப் பெற்றது. தெலுங்கானா காங்கிரஸ் அரசின் மாதிரியை ஒன்றிய அரசு பின்பற்ற வேண்டும். அப்போது தான் துல்லியமான, உண்மையான தரவுகள் கிடைக்கும்.

துல்லியமான, உண்மையான தகவல்கள் கிடைத்தால்தான், உண்மையிலேயே சமூக மற்றும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களைக் கண்டறிந்து, அவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்க முடியும். அவர்களுக்கான தனித்திட்டங்களைச் செயல்படுத்த முடியும். அதன் வாயிலாக, சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.

எனவே, ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை பெயரளவுக்கு நடத்தாமல், அறிவியல் ரீதியாகவும், நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் மிகச் சிறப்பாக நடத்த வேண்டும். இதற்கு தெலுங்கானா காங்கிரஸ் அரசின் மாதிரியைப் பின்பற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.