மதுரையில் வட்டிப் பணம் கேட்டு பெண்ணை மிரட்டியதாக ஒருவரை கந்துவட்டித் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
மதுரை மாநகர் காமராஜபுரம் கக்கன்தெருவை சேர்ந்த செல்வி என்பவர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:
நான் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறேன். ஆறுமுகம் மற்றும் பூரணம் ஆகியோரிடம் அவசரத் தேவைக்காக பணம் வாங்கினேன். இந்நிலையில், கடந்த இரு மாதங்களாக வாங்கிய பணத்திற்கான வட்டித்தொகையை தர முடியவில்லை. இதனால் ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி என்னை அவதூறாக பேசினர். வட்டிப் பணத்தையும் செலுத்திவிட்டேன். ஆனாலும் தொடர்ந்து வட்டி பணம் கூடுதலாக செலுத்துமாறு ஆறுமுகமும் அவரது மனைவியும் பொது இடத்தில் என்னை மிரட்டினர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் தெரிவித்துள்ளார்.
ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி பூரணம் ஆகிய இருவர் மீது கந்துவந்து தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கீரைத்துறை போலீஸார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-மணிகண்டன்







