கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவிகள் தங்கும் விடுதியில் தரமற்ற உணவு வழங்கும் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து மாணவிகள் கைகளில் தட்டு மற்றும் வாளியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டம் மருதமலை பகுதியில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். குறிப்பாக பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் மற்றும் கண்ணம்மாள் மாணவிகள் விடுதிகளில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.இந்த விடுதிகளில் கடந்த சில மாதங்களாக தரமற்ற உணவு வழங்கப்படுவதோடு அவற்றில் பூச்சி, வண்டு மற்றும் புழு உள்ளிட்டவை கிடப்பதாகவும், விடுதிகளில் தண்ணீர் வராததால் மாணவிகள் குளிப்பதற்கும் அத்தியாவசிய தேவைகளுக்கும் தண்ணீர் இன்றி சிரமப்படுவதாகவும் மாணவிகள் புகார் தெரிவித்தனர். பூச்சிகளுடன் வழங்கப்படும் தரமற்ற உணவால் உடல் உபாதைகள் ஏற்படுவதோடு, இதனால் ஏற்படும் மன உளைச்சலால் படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதற்கு கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று திடீரென பல்கலைக்கழகத்தின் வாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் கைகளில் தட்டு மற்றும் வாளிகளுடன் தரமற்ற உணவுகளின் புகைப்படத்தை கைகளில் ஏந்திய மாணவிகள் பல்கலைகழக நிர்வாகத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் சரிவர தண்ணீர் மற்றும் உணவு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தகவலின் பேரில் விரைந்து வந்த வடவள்ளி போலீசார் மாணவிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இது தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர். மாணவிகளின் திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.