சென்னையை அடுத்த சுங்குவார்சத்திரம் அருகே, மறியலில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியர்களிடம், வீடியோ கால் மூலம் மாவட்ட ஆட்சியர் பேசச் செய்த பெண் வேறு நபர் என தெரியவந்துள்ளது.
சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் நிறுவன ஊழியர்களுக்கு, விடுதியில் வழங்கப்பட்ட உணவு தரமற்ற வகையில் இருந்ததால், சிலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களது நிலை குறித்து தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சக பெண் ஊழியர்கள், சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களுடன் சமாதானப்பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கஸ்தூரி என்ற பெண்ணை, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் வீடியோ கால் மூலம் பேசச் செய்தார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஆனால், மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கஸ்தூரி தாம் இல்லை என வீடியோ காலில் பேசிய பெண் விளக்கமளித்துள்ளார். இதுதொடர்பாக, வீடியோ வெளியிட்டுள்ள அவர், தாம் சொந்த ஊரில் இருப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் தம்மைத் தொடர்பு கொண்டு பேசியபோது, சிகிச்சை பெறும் பெண் தாம் இல்லை எனக் கூறியதாகவும், ஆனாலும், அவர் தம்மை போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் வீடியோ காலில் பேசச் செய்ததாகவும் தெரிவித்தார்.
சிகிச்சை பெறும் பெண்ணுக்குப் பதிலாக வேறு பெண்ணுடன் மாவட்ட ஆட்சியர் பேசச் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சிகிச்சை பெற்று வரும் கஸ்தூரி என்ற பெண்ணின் நிலை குறித்து உடனடியாக தங்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் வலியுறுத்தினர்.