கோவையில் நடந்த கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் திட்டமிட்ட தீவிரமாத தாக்குதல் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.
கோவை நவகரை பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியின் மாணவ, மாணவியர் தங்கும் விடுதி கட்டிடங்கள் திறப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, சனாதன தர்மம் இந்த நாட்டின் அடையாளம். பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே பாரதம் உருவானது. ஆயிரம் ஆண்டுகளாக பாரதத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு வருகிறது. நவீன அறிவியல் தொழில்நுட்ப கல்வியோடு சேர்த்து பாரத பண்பாடுகளோடு கூடிய கல்வி முறை தேவைப்படுகிறது.
தமிழகம் பல முனிவர்கள், யோகிகளை கொண்டிருந்த மண். யோகாவை உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளது. சிறந்த ஆளுமையால் இந்தியா வழி நடத்தப்படு வருகிறது. யோகாவையும், இயற்கை மருத்துவத்தையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
தீவரவாதம் நாட்டின் பெரும் பிரச்சனையாக உள்ளது. தீவிரவாத தாக்குதல் நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறது. தீவிரவாதம் அனைத்திற்கும் எதிரானதாக உள்ளது. கோவையில் நடைபெற்ற கார் வெடிவிபத்து ஒரு திட்டமிட்ட தாக்குதல். இதில், அதிக அளவிலான வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. கோவையில் நடைபெற்ற தாக்குதல் மிகவும் ஆபத்தானது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று கூறினார்.
கோவையில் நடந்த கார் வெடிப்பு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இதனை நாம் கண்காணிக்க தவறிவிட்டோமா என ஆளுநர் கேள்வி எழுப்பினார். இந்த சம்பவம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் போலீசார் சிறப்பாக பணியாற்றி, வெடிபொருட்கள் கைப்பற்றியதோடு சம்பந்தப்பட்டவர்களையும் கைது செய்தனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.







