கோவையில் திருட முயன்றதாக கூறி வடமாநில இளைஞரை தாக்கி கொலை செய்த வழக்கில் 10 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 2 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டம், ஆலந்துறை சித்திரைச்சாவடி அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தலையில் ரத்த காயங்களுடன் இருந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், ஆலந்துறைச் சேர்ந்த மணி என்பவர் வீட்டில் திருட முயன்றதாக வடமாநில இளைஞரை பிடித்து கட்டி வைத்து அப்பகுதி இளைஞர்கள் தாக்கியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும், உயிரிழந்த இளைஞரின் சடலத்தை நொய்யல் ஆற்றில் தூக்கி எறிந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த 10 பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில், சிறப்பு உதவியாளர் கனகராஜ் மற்றும் தலைமை காவலர் ஆகிய இருவரையும் ஆயுதபட்டைக்கு மாற்றி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.