கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை இன்று காலை செலுத்திக்கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 1.12 கோடியை கடந்துள்ள நிலையில், இதுவரை 1.09 கோடி பேர் குணமடைந்துள்ளனர். மேலும், தற்போது 1.89 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தை பொறுத்த அளவில் இதுவரை 8,56 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 8.40 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 12,530 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மத்திய அரசு கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. முதல் கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கான தடுப்பூசி போடப்பட்டது. மேலும் இம்மாதம் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் தொடர்ச்சியாக தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் இன்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.
மேலும், அதிகரித்து வரும் தொற்று பாதிப்பினை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும் என்றும் கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் தற்போது வரை 12,530 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




