பதவி விலகலை ஏற்க மறுத்த தலைமை… நெகிழ்ந்த ஆறுச்சாமி…

பதவி விலகிய திமுக ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகி ஆறுச்சாமியை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில…

பதவி விலகிய திமுக ஆதிதிராவிடர் நலக்குழு நிர்வாகி ஆறுச்சாமியை அழைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி. திமுக ஆதிதிராவிடர் நலக்குழு மாநில துணைச் செயலாளர். முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் கோவை மாவட்டத்துக்கு வந்தபோது, பொள்ளாச்சியில் மாற்றுக் கட்சியினர் இணையும் கூட்டம் நடைபெற்றது. இதில் திப்பம்பட்டி ஆறுச்சாமியும் கலந்துகொண்டார். மாநில நிர்வாகியான ஆறுச்சாமிக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்படவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர் கட்சிப் பதவியில் இருந்து விலகுவதாக ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார்.

மேலும், “சமூகநீதி, சுயமரியாதை ஆகியவற்றை ஊட்டிய திமுகவிலேயே, அது கிடைக்கவில்லை. என்றால் எங்கு போக முடியும்.” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், திமுக தலைமை அவரை சென்னைக்கு அழைத்துள்ளது. அங்கு ஸ்டாலின் மற்றும் அன்பகம் கலை உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளை சந்தித்துப் பேசியிருக்கிறார் ஆறுச்சாமி.

“உங்களது வருத்தத்தை எங்களிடம் சொல்லியிருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியிருக்கக் கூடாது. இது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான இயக்கம். உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிறோம்.” என கூறியுள்ளனர். ஸ்டாலினை பார்த்தவுடன் ஆறுச்சாமி கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.

அப்போது, ஆறுச்சாமியின் தோளில் தட்டி முதல்வர் ஆறுதல் சொல்லியுள்ளார். மேலும், அவரது பதவி விலகல் கடிதத்தையும் தலைமை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் ஆறுச்சாமி நெகிழ்ந்துள்ளார். இதற்கிடையே, “இந்தப் பிரச்னையை கையில் எடுக்க நினைத்த பாஜகவின் எண்ணம் தோல்வி அடைந்ததாக” உடன்பிறப்புகள் கூறுகின்றனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.